சென்னை: பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதனின் கண்ணியக்குறைவான பேச்சுக்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை கேள்வி கேட்கும் பெண்கள் மீதான ஆபாசத்தாக்குதல்கள் தொடர்கின்றன. பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்கள் குரலை உயர்த்தி பேசினால் அருவருக்கத்தக்க பேச்சுகள் வருகின்றன. எனக்கு நடந்தது தனிப்பட்ட சம்பவமல்ல; அனைத்து பெண்களும் காலம் காலமாக எதிர்கொள்ளும் பிரச்னை என தெரிவித்தார். “அரசியலில் ஒரு பெண்ணாக பல்வேறு தடைகள், கடினமான காலகட்டங்களை எதிர்கொள்கிறேன்”. தலைமைத்துவத்திலிருந்து பெண்களை வெளியேற்றவே ஆபாசத்தாக்குதல்களை நடத்துகின்றனர்.
வீட்டுப்படி தாண்டிவரும் பெண்களுக்கு கண்ணியம், திறமை எதுவும் இருக்கக்கூடாதென நினைக்கின்றனர். அழுகிப்போன மனநிலையில் உள்ள ஆண்களுக்கு எதிராக காட்டமான எதிர்வினையாற்ற முடியும். இவரைப் பொறுத்தவரையில் வீட்டுப் படிதாண்டி பொதுவெளியில் பொதுவாழ்வில் பங்கேற்கிற பெண்கள் எல்லோருமே வேசிகள் தான். அவர்களுக்கு சொந்த திறமை,உழைப்பு, அனுபவம்,கண்ணியம் எதுவுமே இருக்காது, இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்.
ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனியொரு தாயால் கண்ணியத்தோடும் ,நேர்மையோடும், துணிச்சலோடும்,மதிப்பீடுகளோடும் வளர்க்கப்பட்ட ஒரு பெண் நான். எங்கள் குடும்பத்தில் யாரும் பொதுவாழ்வில் இருந்ததில்லை. அரசியல் என்றாலே அச்சப்படுகின்ற எத்தனையோ குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. நான் எனது 21 வயதில் துணிச்சலோடு பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தேன். ஒரு ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அநீதிக்கு எதிராக ,மக்களுக்காகப் போராடும் போராட்டக்குணத்தால், சமரசமற்ற நேர்மையால்,ஒரு பெண் என்பதால், அரசியல் பின்னணியோ,பெரிய அளவிலான பொருளாதார பலமோ இல்லாத காரணத்தால், வழிகாட்டுவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையால் எத்தனையோ இடர்ப்பாடுகளை, தடைகளை , கடினமான காலகட்டங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் எதற்காகவும் தேங்கிவிடாமல் எனக்கு முன்பு இந்த கடினமான பாதையில் பயணித்து, சாதித்த எத்தனையோ கோடி பெண்களைப் போல, நானும் தடைகளை உடைத்துக் கொண்டு எனது பயணத்தை தொடர்கிறேன் என கூறியுள்ளார்
