தமிழ்நாட்டில் தொழில்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது: மாநில திட்டக்குழு துணை தலைவர் தகவல்

 

சென்னை: 2025-26ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநிலதிட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் நிருபர்களிடம் கூறியதாவது : வளர்ந்த நாடுகளில் 3-4 விழுக்காடு மட்டுமே வேளாண்துறையில் உள்ளனர். நாட்டுக்கு தேவையான வேளாண் பொருட்களை உற்பத்தி செய்துகொள்வார்கள். தமிழ்நாட்டின் பிரதான தொழிலான வேளாண்துறை என்பது மாறி தற்போது 25 விழுக்காடு மக்கள் மட்டுமே வேளாண் தொழில் மேற்கொள்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்துறை வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விட இரட்டை இலக்கில் வளர்ந்துள்ளது. உலகமெல்லாம் 3 விழுக்காடுகள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்தியா 7 விழுக்காடுகளும், தமிழ்நாடு 11.3 விழுக்காடுகள் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மின்னணு சாதன பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு பிரமாண்டமான வளர்ச்சியை அடைந்துள்ளது.

மேலும் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. மின்னணு சாதனங்கள் உற்பத்தியை போலவே காலணி துறையிலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகளில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் தொழில் துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது.

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள உணவுப்பொருள் விநியோக அதிகரிப்பு தாக்கம் தமிழ்நாட்டில் இருக்காது. தமிழ்நாட்டில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: