கோவை, பிப்.16: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. இவை அடிக்கடி உணவு தேடி வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று நவக்கரை அருகே உள்ள ஐயர்பதி என்ற இடத்தில் வனப்பகுதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பட்டா நிலப்பகுதியில் உள்ள முள்கம்பி வேலியில் சிக்கி ஒரு சிறுத்தை உயிரிழந்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். வனத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை தோட்டத்திற்குள் உள்ளே இருந்து வெளியே வரும்போது, நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பழைய முள்கம்பி வேலியில் சிக்கியதும், தப்பிக்க போராடிய போது கம்பி உடலில் ஆழமாக புகுந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்து இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் முன்னிலையில் சிறுத்தைக்கு வனக்கால்படை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவுகள் வரும் போது, சிறுத்தை உயிரிழப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுத்தை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
