பெரம்பூர்: சென்னை பெரம்பூர், வெங்கட்ராமன் தெருவில் வசிப்பவர் சுகுமாரன் (66). இவர், அப்பகுதியில் டூல்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, அதன் சாவியை ஒரு காலணிக்குள் மறைத்து வைத்துவிட்டு, வழக்கம் போல் சுகுமாரன் வேலைக்கு கிளம்பி சென்றிருக்கிறார். பின்னர் மதியம் சுகுமாரன் வீடு திரும்பியபோது, அவரது வீட்டின் கதவு திறந்திருப்பதையும், பீரோவில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியானார்.
இப்புகாரின்பேரில் செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், ஏற்கெனவே சில குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு பெண் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, இவ்வழக்கு நேற்று ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி பகுதியைச் சேர்ந்த இந்துமதி (35) என்ற பெண்ணை கைது செய்து, செம்பியம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணையில், ராணிப்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு இந்துமதி வந்து, பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நகை மற்றும் பணத்தை திருடி வந்திருப்பதும் தெரியவந்தது. மேலும், சம்பவ நாளன்று சுகுமாரன் வீடு மற்றும் பெரம்பூர், ராமச்சந்திரன் தெருவில் மற்றொரு வீடு என 2 இடங்களிலும் இந்துமதி கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது. அவரிடம் ரூ.7 ஆயிரம் ரொக்கப் பணம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது கைது செய்யப்பட்ட இந்துமதிமீது ஏற்கெனவே ராணிப்பேட்டை, அரக்கோணம், பெரும்பாக்கம், போரூர், மதுரவாயல் காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத் தொடர்ந்து, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இந்துமதியை நீதிமன்றத்தில் செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
