மாஜி ராணுவ தளபதியின் சர்ச்சை எதிரொலி; ஓய்வுபெற்ற அதிகாரிகள் புத்தகம் எழுதத் தடை: ஒன்றிய அமைச்சரவை அதிரடி முடிவு

புதுடெல்லி: முன்னாள் ராணுவ தளபதியின் புத்தக சர்ச்சையை தொடர்ந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் பணி குறித்து எழுத 20 ஆண்டுகள் தடை விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் ராணுவ தளபதி நரவனே தனது பணிக்காலம் குறித்து எழுதிய ‘நான்கு நட்சத்திர விதி’ என்ற சுயசரிதை நூல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா ராணுவங்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பான ரகசிய தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த புத்தகத்தின் சில பகுதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் கசிந்ததால், இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த நிலையில், சம்பந்தப்பட்ட புத்தகத்தின் வெளியீடு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, ேநற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் புத்தகம் எழுதுவது குறித்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருந்தவர்கள் ஓய்வுபெற்ற பிறகு 20 ஆண்டுகள் வரை தங்களது பணி அனுபவங்கள் குறித்து கட்டுரை அல்லது புத்தகங்களை எழுத தடை விதிக்கப்பட உள்ளது. இந்த காலத்திற்குப் பிறகு எழுத விரும்பினாலும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் உரிய அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்த விதிகளை மீறி ரகசியங்களை வெளியிடும் அதிகாரிகளின் ஓய்வூதியத்தை ரத்து செய்யவும் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories: