கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரில் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வணிக வளாகம், நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியின் மத்தியில் புதிய நூலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நூலகத் துறைக்கு சொந்தமான இந்த இடத்தில் ஏற்கனவே 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய நூலக கட்டிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மழையில் இடிந்து சேதம் அடைந்தது. இதில், நூலகத்தில் இருந்த ஆயிரக்கணக்கான நூல்கள் சேதுமடைந்தன. இரவு நேரத்தில் கட்டிடம் இருந்து விழுந்ததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.
தற்போது, அதே இடத்தில் இடிபாடுகளை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நூலகம் கட்டப்படும் இந்தப் பகுதி ஒரு மண்மேடு என்பதால் சாலை மட்டத்துக்கு மண் திட்டை அகற்றிவிட்டு கட்டிடத்தை தரமான முறையில் போதிய வசதிகளோடும் கட்ட வேண்டும் என கூடலூர் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நூலகம் கட்டப்பட உள்ள இடம் மட்டுமே மண்மேடாக உள்ளது. மற்ற பகுதிகள் தாழ்வான பகுதியாக உள்ளது. இந்த பகுதிகள் ஏற்கனவே சாலை மட்டத்திற்கு மண் திட்டுகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. சுமார் 10 அடிக்கு மண் திட்டின் மேல் கட்டப்படும் கட்டிடத்தை பாதுகாக்க நான்கு புறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
இது பெரிய செலவுகளுக்கு வழிவகுக்கும். மேலும் வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் நூலகத்திற்கு வந்து செல்வதற்கு சிரமம் ஏற்படும். ஏற்கனவே இருந்த பழைய நூலகத்திற்கு படிக்கட்டுகளில் ஏறி பொதுமக்கள், மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் வாசகர்கள் சென்று வந்துள்ளனர். மேலும் இந்த மேடான பகுதியில் உரிய கண்காணிப்பு இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடைபெற்றுள்ளன. இளம்பெண் ஒருவர் இங்குள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. இதனால், நூலகத்துறைக்கு சொந்தமான இந்த 50 சென்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டும்போது முழுமையாக மண் திட்டை அகற்றி, நூலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் பூங்கா உள்ளிட்டவற்றை அமைத்து கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், கட்டிடத்தை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணி துறையினர் மண்மேட்டில் நிலத்தை சமன்படுத்தி அதில் கட்டிடத்தை கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது பெரும்பாலான பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. நூலகம் அமைக்கும் பணி மிக நீண்ட கால திட்டம் என்பதால் முன்கூட்டியே சரியான திட்டமிட்டு செலவினங்களை குறைத்து போதிய வசதியுடன் நூலகம் அமைய வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகவும் உள்ளது.
இது குறித்து கூடலூர் நகர மன்ற உறுப்பினரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான ராஜேந்திரன் கூறுகையில்,“நூலக கட்டிடம் அமைய உள்ள பகுதியில் உள்ள மண் திட்டை அகற்றி சரியான திட்டமிட்டு நூலக கட்டிடத்தை கட்டினால் ஏராளமான காலியிடம் உருவாகும். இதில் பூங்கா மற்றும் வாகன நிறுத்தங்கள் வைக்கலாம். நூலகத்துக்கு வருபவர்கள் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய வசதி இல்லாத நிலை உள்ளது. மேலும், மேடான பகுதிக்கு அனைத்து வயதினரும் சென்று வருவதில் சிரமங்கள் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பிரதான பகுதியில் இந்த கட்டிடம் அமைய உள்ளதால் சிறப்பான முறையில் நூலக கட்டிடம் உருவாக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.
இதுகுறித்து நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் நேரில் இது குறித்த மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே சரியான முறையில் திட்டமிட்டு, வாசகர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் போதிய வசதியுடன் கூடிய நூலகமாக இந்த நூலகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகமும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் இதில் உரிய கவனம் செலுத்தி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
