ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது புதிய கேப்டனாக இளம் வீரர் ரியான் பராக்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராஜஸ்தான் அணியின் நீண்டகால கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டதை தொடர்ந்து, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார்.
2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ரியான் பராக், கடந்த ஏழு சீசன்களாகத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறார். கடந்த ஆண்டு சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, எட்டு போட்டிகளில் ரியான் பராக் அணியைத் தற்காலிகமாக கேப்டனாக இருந்தார்.
அந்தச் சமயத்தில் அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்தாலும், பேட்டிங்கில் பராக் தனித்துவமாக விளங்கினார். குறிப்பாக, எட்டு போட்டிகளில் 38.57 என்ற சராசரியுடன் விளையாடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 95 ரன்கள் குவித்துத் தனது சிறந்த ஸ்கோரைப் பதிவு செய்தார்.
இதுவரை 84 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள பராக், 141.84 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் மொத்தம் 1566 ரன்கள் குவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டு சீசனில் 573 ரன்கள் குவித்தது இவரது மிகச்சிறந்த செயல்பாடாகக் கருதப்படுகிறது. 2025 சீசனுக்குப் பிறகு தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகிய நிலையில், தற்போது குமார் சங்கக்காரா மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
