குடவோலை முதல் ஒரு விரல் புரட்சி வரை…தமிழர்கள் கண்ட தேர்தல்

 

சர்வதேச அளவில் இந்தியாவில் நடக்கும் தேர்தல் குறித்து சமீபமாக ஓர் வித்தியாசமான பார்வை உருவாகி இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை ஒன்றிய பாஜ அரசு மேற்கொண்டு வருவதால் அடுத்து என்ன மாதிரியான செயல்திட்டத்தை அவர்கள் கொண்டு வரப்போகிறார்கள் என சர்வதேச சமூகம் உற்று நோக்குகிறது. இந்த தருணத்தில் தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்ற தேர்தல் வரப்போகிறது. ஏதாவது செய்து இந்தியா முழுமையும் தனதாக்கிக் கொள்ளலாம் என்ற அஜண்டாவோடு திட்டம் தீட்டி வரும் பாஜ, அதிமுகவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், இந்த பெரியார் பூமி எப்போதும் எங்கள் கையில்தான் என எப்போதும் போல் கூலாக தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கிறது திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி. இப்போது நாம் புரிந்துகொள்ளலாம்… இந்த தேர்தல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை! தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், பண்பாட்டு சூழல் போன்றவற்றைப் போலவே இங்கு நடைபெறும் தேர்தலும் தனித்துவம் வாய்ந்தது. இத்தகைய தேர்தல் தமிழகத்தில் உருவான கதை வெகு சுவாரஸ்யம் நிரம்பியது.

அதற்கு நாம் சென்னை மாகாணம் சென்னை மாநிலமாக உருவாகி, பின்பு தமிழ்நாடாக பரிணமித்து தேர்தல்களை எதிர்கொண்ட சம்பவங்களை ரத்தின சுருக்கமாக பார்ப்போம்.
வாரிசு இன்றி அரசன் இறந்தால் பட்டத்து யானை யாருக்கு மாலை சூட்டுகிறதோ அவருக்கே நாடாளும் உரிமை தரப்பட்டது. இது முன்னாளில் நடந்த ஒரு தேர்தல் முறையாகும். இதேபோல் சங்ககாலம் முதலே தமிழகத்தில் கிராமசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. இப்பழமைத்தேர்தலை ‘குடவோலை முறை’ என்றனர். இத்தேர்தலின் வேட்பாளர்கள் பெயர்கள் தனித்தனி ஓலை நறுக்குகளில் எழுதி ஊரார் முன்னிலையில் குடத்தில் போடப்படும். பின்னர் ஒரு சிறுவனைக் கொண்டு அதிலிருந்து ஒவ்வொன்றாக எடுக்கச் செய்து தேர்வான உறுப்பினர் பெயர்கள் உரக்கப் படிக்கப்படும். இதற்கான வேட்பாளர்கள் பெயர்களை மக்களே தேர்வு செய்தனர். அரசனின் அதிகாரி அங்கு அமர்ந்து கண்காணிப்பார். இத்தேர்தலில் குழப்பங்கள், கலகங்கள் இருந்ததில்லை. போட்டியாளர் வெற்றி தோல்வியை கடவுள் தீர்மானிப்பதாக நம்பப்பட்டது.

திருநெல்வேலி மானூரில் கிபி 800ல் கண்டறிந்த மாறன் சடையன் கல்வெட்டு பாண்டிய நாட்டு கிராமங்களில் குடவோலை வழக்கத்தில் இருந்ததைத் தெரிவிக்கிறது. இதேபோல் கிபி 919களில் உத்திரமேரூரில் முதல் பராந்தகன் சோழர் கால வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டும் உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் கிராம நிர்வாகம் குடவோலை முறைப்படி நடந்ததை உறுதி செய்கிறது. இக்குடவோலை முறை ராஜராஜ சோழர் காலத்திற்கும் முன்பிருந்தது தெளிவாகிறது. அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் ஆகிய இடங்கள் கிராம சபை பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மக்கள் வாழ்ந்த ஊர்கள் ஊர்சபை என வழங்கப்பட்டிருக்கிறது. கோயில் மண்டபங்கள், பொது இடங்கள், குளக்கரை, மரத்தடிகளிலேயே இத்தேர்தலும், கிராமசபைக் கூட்டங்களும் நடந்தன. இப்படி தமிழகத்தில் குடவோலை முறை தேர்தல் பல்லாண்டுகள் தொடர்ந்திருக்கிறது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் ஒரு குடையின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது. மக்களிடம் சுதந்திர உணர்வு மேலோங்கியதால், ஆட்சிப்பொறுப்பில் இந்தியர்களுக்கு பங்களிப்பு தரும் கட்டாயம் ஆங்கில அரசுக்கு வந்தது. இந்திய கவுன்சில் சட்டத்தை 1861ல் நிறைவேற்றி, சென்னை கவுன்சில் உருவாக்கப்பட்டது. இச்சட்டம் 1892ல் மாற்றியமைக்கப்பட்டு, சென்னை (சட்டமன்றம்) கவுன்சிலுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை 1909ல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1919ல் சென்னை கவுன்சிலுக்கு
98 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இங்கும் சொத்து இருப்பவர்களுக்கே ஓட்டளிக்கும், தேர்தலில் நிற்கும் உரிமை தரப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர் ஆட்சியில் இப்படி பல தேர்தல்கள் நடந்தன. இந்தியா 1947ல் சுதந்திரமடைந்து, அரசியல் சாசனம் உருவானது. அதன்பின் இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு 1952ல் முதல் தேர்தல் நடந்தது. முதலில் 21 வயது நிரம்பியவருக்கே ஓட்டுரிமை இருந்தது. இப்போது 18 வயது நிரம்பியவர்களுக்கு இவ்வுரிமை தரப்பட்டிருக்கிறது. முதல் தேர்தல் 1952ல் நடந்தபோது, ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி ஓட்டுப்பெட்டி வெவ்வேறு வண்ணங்களில் வைக்கப்பட்டது. வாக்காளரிடம் தரும் ஓட்டுச் சீட்டை விரும்பிய வேட்பாளருக்கான வண்ணப் பெட்டியில் போட்டால் போதும். பின்னர் வாக்காளரிடம் தரும் ஓட்டுச்சீட்டில் வேட்பாளர் பெயர்கள், சின்னங்களில் விரும்பும் சின்னத்தை முத்திரையிட்டு, வாக்குச்சாவடியில் உள்ள ஒரு பெட்டியில் மட்டும் போட்டால் போதும். வாக்காளர் இடதுகை ஆட்காட்டி விரலில் மை இடும் வழக்கமும் வந்தது. பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் கீழ் ஒரு நாடாளுமன்ற தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விருப்பம் இல்லையெனில் நோட்டா (NOTA – None of the Above) புதிய முறை மூலம் ஓட்டைப் பதிவு செய்யும் வசதி வந்திருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் எனும் சுயஉரிமை அமைப்பு, உலகின் மிகப்பெரிய இந்த ஜனநாயகத் திருவிழாவை நடத்தி இந்தியாவை ஆள்வதற்கான புதிய அரசு அமைய வழிசெய்கிறது. இவ்வகையில் மாநில உரிமைகளுக்கெனவும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்படுகிறது.

 

Related Stories: