பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓமனில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நெதன்யாகு அந்நாட்டு அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகைக்கு சென்று சந்தித்தார். அவரை அதிபர் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார். அப்போது, ஈரானின் யுரேனியம் வளங்களை நிறுத்தவேண்டும், அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை திரும்ப பெற வேண்டும் மற்றும் கிளர்ச்சி படைகளுடனான உறவுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது அமெரிக்கா ராணுவ தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி டிரம்ப் கூறுகையில், ஒப்பந்தம் செய்து கொள்வதில் ஈரான் ஆர்வம் காட்டி வருகிறது. அதே நேரத்தில், இப்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்றால் தாக்குதல் நடத்தப்படும். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் குறித்து ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும்.

முந்தைய அமெரிக்க நிர்வாகம், ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முட்டாள்தனமானது’ என்றார். கடந்தாண்டு ஜூன் 22ம் தேதி ஈரான் மீது அமெரிக்க ராணுவம் போர் விமானங்கள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: