புதுடெல்லி: ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் தேச விரோத வழக்குகள் இனிமேல் வேகம் எடுக்க வாய்ப்புள்ளது. தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தும் வழக்குகளை விரைந்து முடிக்க 17 மாநிலங்களில் பிரத்யேக தனி நீதிமன்றங்களை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை ஏற்று இந்த முக்கிய முடிவை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. இதற்காக ஒரு நீதிமன்றத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்களில் குறைந்தது ஒரு நீதிமன்றமாவது இதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிலம் மற்றும் கட்டிட கட்டுமான செலவுகள் தவிர்த்து மற்ற நிர்வாக செலவுகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். டெல்லியில் மட்டும் தற்போது அதிகபட்சமாக 59 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், ‘தீவிரவாத குற்றங்கள் மிகவும் தீவிரமானவை என்றாலும், வழக்கமான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளால் குற்றம் சாட்டப்பட்டவர்களை காலவரையின்றி சிறையில் அடைக்க முடியாது’ என சுட்டிக்காட்டினார். இதன் காரணமாகவே தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை மற்ற பொதுவான வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்காமல், தனியாக விசாரிக்க இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேச பாதுகாப்பு தொடர்பான முக்கிய வழக்குகளில் நிலுவை இன்றி விரைவான தீர்ப்பு வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்குள் இந்த நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படத் தொடங்கும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
