புதுடெல்லி: சபாநாயகரின் அறைக்குள் புகுந்து அவரை ஆபாச வார்த்தைகளால் காங்கிரஸ் எம்பிக்கள் திட்டினர் என்று ஒன்றிய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கு அவையில் பேச போதுமான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், அவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. அதையடுத்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருதல் தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து, சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவியில் இருந்து நீக்கக்கோரி முறைப்படி நோட்டீஸ் அளித்துள்ளனர். இந்த நோட்டீஸில் சபாநாயகர் தொடர்ந்து நடுநிலை தவறி செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மக்களவை செயலகத்திற்கு அளிக்கப்பட்ட இந்த நோட்டீஸில் 2026ம் ஆண்டுக்கு பதிலாக நான்கு இடங்களில் 2025ம் ஆண்டு என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய பிழைகள் இருந்தால் நோட்டீஸை உடனடியாக ரத்து செய்ய விதிகள் இடம் அளித்தாலும், ‘குறைகளை சரி செய்ய வாய்ப்பு வழங்கி விதிமுறைகளின்படி விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருத்தப்பட்ட நோட்டீஸ் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டமான மார்ச் 9ம் தேதிக்குப் பின் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அதுவரை நாடாளுமன்ற மரபுப்படி சபாநாயகர் பதவியில் இருந்து விலகி இருக்க ஓம் பிர்லா முடிவு செய்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 96-ன் படி, பதவி நீக்க தீர்மானம் பரிசீலனையில் இருக்கும்போது சபாநாயகர் அவையை வழிநடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து நேற்று முதல் மக்களவை செயல்படத் தொடங்கியது. முன்னதாக சமாஜ்வாதி எம்பி அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால், திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவைச் சந்தித்துப் பேசியும் சுமுக முடிவு ஏற்படவில்லை. இருப்பினும், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று வர்த்தக ஒப்பந்தம் போன்ற முக்கியப் பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற வளாகத்தில் ‘நரேந்திர சரண்டர்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன் ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘குறைந்தது 20 முதல் 25 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அறைக்குள் புகுந்து அவரை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டினர்.
அப்போது நானும் அங்குதான் இருந்தேன். சபாநாயகர் மிகவும் மென்மையானவர் என்பதால் அமைதி காத்தார், இல்லையென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். பிரியங்கா காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் போன்ற மூத்த தலைவர்கள் முன்னிலையிலேயே இந்தச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தால் சபாநாயகர் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். ராகுல் காந்தியின் செயல்பாடுகள் நாடாளுமன்ற விதிகளை மீறுவதாக உள்ளது. தன்னுடைய விருப்பப்படி பேச யாருடைய அனுமதியும் தேவையில்லை என ராகுல் காந்தி கூறுகிறார். நாட்டின் பிரதமர் கூட சபையின் அனுமதி பெற்றே பேச வேண்டும் என்பதுதான் விதிமுறை.
ராகுல் காந்தி எந்த உலகில் வாழ்கிறார் என்றே புரியவில்லை. அவர் ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்கிறார். நாட்டின் பாதுகாப்பை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி எவரது கண்ணியத்தையும் குறைப்பது முறையல்ல. காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ராகுல் காந்திக்கு நாடாளுமன்றம் எவ்வாறு செயல்படும் என்பதை விளக்கிக் கூற வேண்டும்’ என்று கூறினார்.
