அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாக். வெற்றி

 

கொழும்பு: உலகக் கோப்பை டி20 தொடரின் 12வது போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. அதில் பாகிஸ்தான் – அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய பாக் அணியின் துவக்க வீரர் சயீம் அயூப் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஷாகிப்ஸதா ஃபர்கான் அட்டகாசமாக ஆடி 41 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 73 ரன் விளாசினார். பின் வந்த வீரர்களில் கேப்டன் சல்மான் ஆகா 1, பாபர் அஸம் 46, முகம்மது நவாஸ் 5, சதாப் கான் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். உஸ்மான் கான் ரன் எடுக்காமல் ரன் அவுட்டானார். ஃபாஹீம் அஸ்ரப் 1 ரன்னில் வீழ்ந்தார். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான், 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன் குவித்தது.

அமெரிக்கா தரப்பில் ஷாட்லி வான் ஸால்க்விக் 4, ஹர்மீத் சிங், முகம்மது மோசின், சவுரப் நேத்ரவால்கர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர், 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய அமெரிக்க அணியில், ஷயன் ஜகாங்கிர் 49 (34), மிலிந்த் குமார் 29 (22), ஷுபம் ரஞ்சன் 51 (30) மட்டுமே சிறப்பாக செயல்பட்டனர். மற்ற எந்த வீரரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.இதனால், அமெரிக்கா அணி, 20 ஓவர்கள் முடிவில் 158/8 ரன்களை எடுத்து, இறுதியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

Related Stories: