டெல்லியில் 800க்கும் மேற்பட்டவர்கள் மாயமான விவகாரம் : விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி : டெல்லியில் கடந்த மாதம் 800க்கும் மேற்பட்டவர்கள் மாயமான விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது. டெல்லியில் ஜனவரி மாத முதல் 2 வாரங்களில் 807 பேர் மாயமானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்திகளின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

டெல்லியில் மாயமான 807 பேரில் 191 சிறார்கள் மற்றும் 616 பெரியவர்கள் உள்ளதாகவும் இவர்களில் தற்போது வரை 235 பேரை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையம், எஞ்சிய 572 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தி அறிக்கையின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், அவை மனித உரிமைகள் மீறல் தொடர்பான தீவிரமான சிக்கல்களை எழுப்புவதாக மனித உரிமைகள் ஆணையம் கருதுவதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க டெல்லி மாநகர தலைமை செயலாளர் மற்றும் டெல்லி காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்ரவரி 5ல் வெளியான ஊடக அறிக்கையின்படி, கடந்த 2025-ம் ஆண்டில் டெல்லியில் மொத்தம் 24,508 பேர் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 60% பேர் பெண்கள் என்றும் குறிப்பிட்டுள்ள மனித உரிமைகள் ஆணையம், காணாமல் போனவர்களில் 15,421 பேரை காவல்துறையால் கண்டுபிடிக்க முடிந்ததாகவும் அதே நேரத்தில் 9,087 வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் கூறியுள்ளது.

Related Stories: