*ஆணையாளர், நகராட்சி தலைவர் வழங்கினர்
ஆற்காடு : ராணிப்பேட்டை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை ஆணையாளர் மற்றும் நகராட்சி தலைவர் வழங்கினர். இந்தியாவிற்கே வழிகாட்டியாக தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இத்திட்டம் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கம் ஊராட்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் விரிவாக்கத்திற்கு பிறகு பெரு நகர சென்னை மாநகராட்சி உட்பட 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1,29,689 தூய்மை பணியாளர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆற்காடு நகராட்சி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆணையாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி, 225 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் பென்ஸ் பாண்டியன், மேலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் மேல்விஷாரம் நகராட்சி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆணையாளர் கோ.பழனி தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் எஸ்.ஜபர் அஹமத் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் எஸ்.குல்ஜார் அஹமத் கலந்து கொண்டு 108 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் இமாயூன் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விளாப்பாக்கம் பேரூராட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், செயல் அலுவலர் வி.ஜானகிராமன் தலைமை தாங்கி, 23 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அரக்கோணம் நகராட்சி சார்பில் நடந்த விழாவிற்கு ஆணையாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
நகராட்சி துணை தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ் முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் வெயில் முத்து வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் லட்சுமி பாரி கலந்துக்கொண்டு, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் காலை உணவு வழங்கினார்.
கலவை: கலவை பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, செயல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் நீலாவதி தண்டபாணி, மன்ற உறுப்பினர்கள் உமா சேகர், ஹாபிரசனாவுல்லா, புண்ணியகோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மன்ற தலைவர் கலா சதீஷ், பங்கேற்று, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி நேற்று தொடங்கி வைத்தார்.
சோளிங்கர்: சோளிங்கர் நகராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், துணைத் தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் நாராயணன் பங்கேற்று, தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி, தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
இதில் நகராட்சி கவுன்சிலர்கள் அசோகன், அருண் ஆதி, லோகேஸ்வரி சரத்பாபு, பொறியாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் தேவிபாலா, பணி ஆய்வாளர் மனோஜ் குமார், வருவாய் பிரிவு பாலாஜி, மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் பேரூராட்சியில், தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ச.லோகநாதன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது பேரூராட்சி மன்ற கவுன்சிலர் சீனிவாசன், பணி மேற்பார்வையாளர் பன்னீர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
நெமிலி: பனப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார். உடன் செயல் அலுவலர் சரவணன், துணைத் தலைவர் மயூரநாதன் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
