திருப்பூர், பிப்.10: திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிச்சிபாளையம் பகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகர செயலாளர் டிகேடி மு.நாகராசன் தலைமையில், பெரிச்சிபாளையம் பகுதி கழக செயலாளர் தம்பி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் எம்எல்ஏ மற்றும் மாநில துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்பி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பேசியதாவது: பாஜ ஆளும் வட மாநிலங்களை விட தமிழ்நாடு கல்வி மற்றும் தொழிலில் முன்னேறிய மாநிலமாக உள்ளது. இந்திய துணைக்கண்டமே பாராட்டும் வகையில் பல நலத்திட்டங்கள் தமிழகத்தில் திராவிட மாடல் அரசால் செயல் படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மோடியின் திட்டம் பலன் அளிக்காது. திமுகவின் வரலாறு அவர்களுக்கு தெரியாது. தேர்தல் வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றும் அரசாக திமுக அரசு உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் திராவிட மாடல் அரசு மீண்டும் வெற்றி பெறும்.
