ஊட்டி,பிப்.10: ஊட்டி-கோத்தகிரி சாலையில் ஸ்டோன் ஹவுஸ் பகுதியில் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான காலியிடத்தில் ரேஷன் கடை அமைத்து கொடுக்க வேண்டும் என கீழ் கோடப்பமந்து பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டி அருகே கீழ் கோடப்பமந்து பகுதி மக்கள் நேற்று கலெக்டரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கான ரேஷன் கடை மேல் கோடப்பமந்து பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது.இதனால் ஏழை எளிய மக்கள் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் இந்த சமுதாயக்கூடத்தை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
ஊட்டி கோத்தகிரி சாலையில் ஸ்டோன் ஹவுஸ் பகுதியில் கோத்தர் பழங்குடியின மக்களின் சமுதாயக் கூடம் உள்ளது. இதன் அருகில் வருவாய் துறைக்கு சொந்தமான காலியிடம் உள்ளது.அந்த இடத்தில் ரேஷன் கடை அமைத்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் கோடப்பமந்து,ஆரணி அவுஸ், வண்ணாரபேட்டை, அம்பேத்கர் காலனி பகுதி மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
