மனம் பேசும் நூல் – 10

நன்றி குங்குமம் தோழி

பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்கிழமைகள்!

எழுத்தாளர் மிட்ச் ஆல்பம் எழுதிய நூலை தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழிப் பெயர்த்துள்ளார். தற்போதைய காலகட்டம் என்பது ‘வெற்றியடைந்து விடு! முன்னேறி விடு! நிற்காமல் ஓடிக் கொண்டே இரு!’ என்பது மாதிரியான புத்தகங்கள் நிறைந்திருக்கிறது. மக்களும், வாழ்க்கையில் வெற்றியடைந்தே தீர வேண்டிய சூழலில் வாழ்வதோடு, அவர்களின் வாழ்வியல் சூழலும், பொருளாதார சிக்கல்களில் இருந்து சோர்ந்து விடாமல் இருப்பதற்கான சிந்தனைகளைத் தூண்டுகிற புத்தகங்களின் தேடல் மற்றும் அது சார்ந்த பேச்சாளர்களை நோக்கியதாகவே இருக்கிறது. வலைப்பக்கங்களில் வருகிற சின்னச் சின்ன ரீல்ஸ்களும் அதையே விதைக்கிறது.

நம்மோடு இருக்கும் உறவினர்களில் இருந்து நண்பர்கள் வரை ஓடிக் கொண்டிருப்பதில் உள்ள சிக்கல்களில் இருந்து ஒளிந்து கொள்வதையும், அமைதியாக தேங்கி நிற்பதையும் சில நேரங்களில் நாம் பார்க்கிறோம். இதற்கு முக்கிய காரணமாய் இருப்பது, நெருங்கிய நபர் ஒருவரின் மரணத்தை பார்க்கும்போதே. அப்போதுதான் பொறாமைகள், குற்ற உணர்வுகள், வெறுப்புகள், துரோகங்கள் கடந்து, அந்த மரணத்தில் பதிலற்று நின்று விடுகிறோம்.

இந்தப் புத்தகமும் மரணத்தை எதிர்கொள்வது பற்றியும், வாழ்வின் மீது எந்த புகாருமின்றி வாழப் பழகுவதற்கும் கற்றுக் கொடுக்கிறது. நாம் எப்படி சாக ஆசைப்படுகிறோம் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே, நாம் எப்படி வாழ வேண்டும் என்ற எண்ணம் கூட வரும் என்கிறார் இக்கதை ஆசிரியர். இந்தக் கதையின் நாயகன் ஒரு பேராசிரியர். ஒருநாள் அவருக்கு குணப்படுத்த முடியாத வியாதி வந்திருப்பதை கண்டறிகிறார். அந்த வியாதியை எப்படி அவர் எதிர் கொள்கிறார் என்பதையே இந்தக் கதை நம்மிடம் பேசுகிறது.

நோயால் பாதிக்கப்பட்ட நாட்களை எப்படி கடந்தார் என்றும், அவரது வாழ்நாளில் இருந்த அனுபவங்கள் பற்றியும், அவரை சந்திக்க வரும் மாணவனிடம் பேசுகிறார். அவருக்கும் அவரது மாணவருக்கும் இடையே நடக்கின்ற உரையாடல்தான், நமக்கு மிகப்பெரிய ஆறுதலை தருகிறது.பேராசிரியரை நோய் தாக்கிய போது, அவரது அனுபவங்களின் வழியாகவும், நினைவுகளின் வழியாகவும் பல கேள்விகள் அவருக்குள் எழுகின்றது. அந்தக் கேள்விகளுக்கு பதில்கள் தேடுவதற்குள் அவரது நோய் அவரை முழுமையாக ஆக்கிரமிக்கிறது.

இப்படித்தான் நமது வாழ்க்கையிலும், நாம் பதில் சொல்ல வேண்டிய சூழல்களில் இருந்து தப்பித்து ஓடத்தான் பார்க்கிறோம். இன்றைய டிஜிட்டல் உலகில் தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது, தனக்கு எதிராக உரையாடக் கூடாது போன்ற மனநிலையில் பலர் இருக்கிறார்கள். ஆனால், நோயும் மரணமும் நெருங்கும்போது நிறைய உரையாட ஆசைப்படுகிறார்கள். உரையாடல் வழியாகவே தங்களின் கணக்குகளை தீர்த்துக் கொள்ள முடியும் என நம்புகிறார்கள்.

இந்தக் கதையின் ஆசிரியரும் தன் மாணவனுக்கு பல்வேறு விதங்களில் வாழ்க்கைப் பற்றி எடுத்துக் கூறுகிறார். வாழ்க்கை என்பது நேரெதிர் விஷயங்களின் இழுபறி எனவும், வாழ்க்கை என்பது முன்னுக்கும் பின்னுக்கும் இழுக்கப்பட்டுக் கொண்டிருப்பது என்றும், நீ ஒன்றைச் செய்ய விரும்புவாய், ஆனால், வேறொன்றைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பாய் என்றும், இவற்றில் வெற்றியடைவது கேள்வியல்ல, முழு மனதோடு அன்பாய் இருந்து நீ செய்யும் செயலே என்றும் கூறுவார்.

இந்த சமூகத்தைப்பற்றி நாம் அக்கறையோடு இருக்கிறோமா? அல்லது இந்த சமூகத்திற்கு எந்த அளவிற்கு நமது பங்கினை வழங்கியிருக்கிறோம் என்ற கேள்வியை தினம் தினம் கேட்டுக் கொள்ளச் சொல்வார். நமது உரையாடல்கள், உறவாடல்கள் மற்றும் அன்பு பரிமாற்றங்கள் மூலமே நம்மை மன நிம்மதியாக வைத்துக் கொள்ள முடியும் என்று தீர்க்கமாக நம்பினார்.யதார்த்தம் கசப்பானதாய் இருக்கிறதே என மாணவர் கேள்வி எழுப்ப, நாம் எப்பொழுதும் அன்பிற்கு தகுதியானவர் இல்லை என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம்.

ஏனென்றால், அன்பு நம்மிடம் வந்தால் நாம் பலவீனமாக்கப்படுவோம் என்று நம்புகிறோம். உண்மையில் அன்பு ஒன்றே அறிவார்ந்த செயல் என்று சிந்தனையாளர் லெனின் கூறுகிறார் என, அன்பைப் பற்றி பேராசிரியர் பேசும் போது, ‘என்னிடம் அன்பாக இருக்கும் மனிதர்களை எக்காரணம் கொண்டும் அவர்களது உழைப்பை சுரண்ட மாட்டேன். நான் ஒரு போதும் பிறருடைய உழைப்பின் மூலம் பணம் சம்பாதிக்க மாட்டேன்’ என்ற உறுதிமொழியை அவர் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்.

இன்றைய மனிதர்கள் ஏதோ ஒருவிதத்தில் குழந்தைகள் முதல் பெற்றோர்கள் வரை அன்பை வைத்து ஒருவர் மற்றொருவர் வாழ்க்கையில் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. அதில் சிலருக்கு குற்ற உணர்வே வருவதில்லை. அதையெல்லாம் பார்க்கும் போது இம்மாதிரியான மனிதர்களையும், புத்தகங்களையும் நாம் அடிக்கடி நமது உரையாடல் வழியாக பேச வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.

இன்றைய சோஷியல் மீடியா யுகத்தில் எந்தவொரு உணர்வையும் முழுமையாய் நாம் உணர்வதில்லை, உணர முற்படுவதும் இல்லை. இதில் பேராசிரியர் அடிக்கடி கூறுவது, நமக்குள் தோன்றும் உணர்ச்சிகள் முழுமையாக நம்மை மூழ்கடிக்கிறபோதுதான், முழுமையாக அவற்றை உணர முடியும் என்றவர், அது அன்பாக இருந்தாலும், வலியாக இருந்தாலும், வேறு எவ்விதமான உணர்ச்சியாக இருந்தாலும், அதை முழுமையாக அனுபவித்த பிறகே, அந்த உணர்ச்சியிலிருந்து விலகி இருக்க முடியும் எனவும் கூறுகிறார்.

நாம் ஒரு நபர் மீது பரிவு காட்டும் போது, அவரது வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டுமே நாம் செய்ய முயற்சிக்க வேண்டும். அதை விட்டு தற்காலிக தீர்வான பணத்தை கொடுக்கும் போது, பரிவாக எடுத்துக்கொள்ள முடியாது. அதேபோல் அன்பை நிரூபிக்க அதிகாரம் சரியான தீர்வல்ல என்கிறார்.நாம் சக மனிதனிடம் அன்பு செய்ய சாதாரண மனிதனாக இருந்தாலே போதுமானது. ஒரு நோயாளியாக எனக்குள் மரணத்தை நெருங்கிப் பார்த்துக் கொண்டிருக்கும். என்னிடம் அதிகாரத்தை காண்பிக்கும் நபரை விட என்னுடன் உன்னைப் போல வந்து பேசும் இயல்பான உரையாடல்தான் அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதை இந்த நிமிடம் நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன் என்று தன்னுடைய மாணவரிடம் ஆசிரியர் கூறுகிறார்.

இந்த வாழ்க்கையிலிருந்து நாம் எதை எடுக்கிறோமோ அதை வைத்து நமது வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ள பழக வேண்டும். அப்படி பழகத் தெரிந்த மனிதர்கள் மட்டுமே இந்த சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.நாம் யாரை நேசித்தாலும், நாம் யாரை மதித்தாலும், அவர்களது உணர்வுகளுக்கு மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், அந்த நபரை நாம்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அதற்கான மதிப்பை நாம் மிகவும் கவனமாக, பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பதை இந்த தலைமுறை மிகவும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்படியாக இந்தப் புத்தகம் முழுவதும் நமது வாழ்க்கையில் நாம் எந்த மாதிரியான தவறுகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் அல்லது வாழ்க்கையை நாம் எவ்வளவு புரிதலின்றி கையாண்டு கொண்டிருக்கிறோம் என்பது புரிய வரும். டிஜிட்டல் டிஜிட்டல் என்று நவீனத்தின் பின் நாம் ஓடினாலும், இறுதியில் மனிதர்களை நம்பித்தான் வாழ வேண்டும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நமக்காகவும், பிறருக்காகவும், சமூகத்துக்காகவும்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாருமே வேண்டாம்… தனியாகவே வாழ்ந்து விடுகிறோம் என்று கூறும் மனிதர்களிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சிறு சிறு முரண்களுக்கும் மனிதர்களை விட்டு விலகி என்ன செய்யப் போகிறோம் என்றுதான் இந்தப் புத்தகமும் நம்மிடம் கேள்வியை முன் வைக்கிறது.

Related Stories: