×

சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டத்தினால் விமான சேவைகள் பாதிப்பு: திருப்பி அனுப்பப்பட்ட 7 விமானங்கள்

மீனம்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் நீண்ட நேரம் கடும் பனிமூட்டம் நிலவியதால், சென்னை விமானநிலையத்தில் பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதில் 7 விமானங்கள் ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர், திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், 10க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு தாமதமானதால் ஏராளமான பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து இன்று அதிகாலை முதல் நீண்ட நேரம் கடும் பனிமூட்டம் நிலவியது. இதையடுத்து, சென்னை விமானநிலையப் பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. இதனால் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள், அங்கு ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால் தரையிறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்து தத்தளித்துவிட்டு, மீண்டும் பெங்களூர் மற்றும் திருப்பதிக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

குறிப்பாக, மும்பையில் இருந்து 157 பயணிகளுடன் இன்ற காலை 6.35 மணியளவில் சென்னை வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மும்பையில் இருந்து 149 பயணிகளுடன் காலை 7 மணியளவில்சென்னை வந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரில் இருந்து 180 பயணிகளுடன் காலை 7 மணியளவில் சென்னை வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பெங்களூரில் 164 பயணிகளுடன் காலை 7.15 மணியளவில் சென்னை வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஐதராபாத்தில் இருந்து 162 பயணிகளுடன் காலை 8 மணியளவில் சென்னை வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் என மொத்தம் 12 விமானங்கள், சென்னை விமானநிலைய ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன. இதைத் தொடர்ந்து, அந்த 12 விமானங்களையும் சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பெங்களூர் மற்றும் திருப்பதி விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர். இதன்பின் ஒவ்வொன்றாக 5 விமானங்களும் பெங்களூர், திருப்பதிக்குத் திரும்பி சென்றன. மேலும், சென்னை விமானநிலையப் பகுதியில் இன்று காலை பனிமூட்டம் அதிகரித்தால், சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்களை பெங்களூர், திருப்பதி விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்புவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதுதவிர, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 21 விமானங்களின் புறப்பாடும் கடும் பனிமூட்டம் காரணமாக பலமணி நேரம் தாமதமாகி உள்ளன. குறிப்பாக, சென்னையில் இருந்து பெங்களூர், ஐதராபாத், மும்பை, அந்தமான், திருச்சி, டெல்லி உள்பட 10 விமானங்களின் புறப்பாடு, கடும் பனிமூட்டம் காரணமாக பலமணி நேரம் தாமதமாகியுள்ளன. இதன் எண்ணிக்கை கடும் பனிமூட்டம் காரணமாக இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னை விமானநிலையப் பகுதிகளில் தொடர் பனிமூட்டம் காரணமாக பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு சூரிய ஒளி வந்ததும் விமான சேவைகள் சகஜ நிலைக்கு திரும்பியது.

சென்னை விமானநிலையத்தில் இன்று அதிகாலை முதல் தொடர் கடும் பனிமூட்டம் ஏற்பட்டதால், பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பயணிகளின் பாதுகாப்பு கருதி, சில விமானங்கள் பெங்களூர், திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை பார்வை தூரம் 1500 மீட்டராக இருந்தது. காலை 6.30 மணியளவில் அது 35 மீட்டராகவும், காலை 7.30 மணியளவில் 150 மீட்டராகவும் பார்வை தூரம் குறைந்துவிட்டது. விமானங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, அவற்றை தரையிறங்குவதற்கு அனுமதிக்காமல், பிற விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. இன்று காலை 9 மணிக்குள் நிலைமை சீரடைந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Tags : Chennai ,Meenambakkam ,Chennai airport ,Bangalore ,
× RELATED கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருக்கும்...