திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் எம்மிகனூர் அடுத்த கலுகட்லாவில் ‘மீ பூமி மீ ஹக்கு’ (உங்கள் நிலம் உங்கள் உரிமை) திட்டத்தின்கீழ் நிலத்தின் பட்டாதாரர்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று பேசியதாவது: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகளில் கோயில்களில் கலப்பட நெய்யுடன் பிரசாதம் விநியோகித்து வழங்கினர்.
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயில் பிரசாதத்திலும் கலப்படம் நடந்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கழிவறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளது. இதில் காய்கறி எண்ணெயை விட விலங்குகளின் கொழுப்பு விலை குறைவு என்பதால், அதுவும் நெய்யில் கலக்கப்பட்டுள்ளது. இதை நான், தேசிய பால்வள வாரிய சோதனை அறிக்கை அடிப்படையில்தான் கூறுகிறேன்.
சிபிஐ மற்றும் எஸ்ஐடி எந்த ஒரு இடத்திலும் கலப்படம் செய்யவில்லை எனக்கூறவில்லை. திருமலை லட்டு விஷயத்தில் முந்தைய ஆட்சியாளர்கள் பெரும் பாவம் செய்துள்ளனர். திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய்யை வழங்கிய விவகாரம், பக்தர்களின் உணர்வுகளுடன் தொடர்புடையது. ஆனால் அதில் விளையாடி உள்ளனர்.
திருமலையில் லட்டு கலப்படம் செய்யப்படுவதாக 2022ம் ஆண்டிலேயே சி.எப்.டி.ஆர்.ஐ அறிக்கையில் தெளிவாக கூறியிருந்தாலும், அவர்கள் எந்த தயக்கமும் இன்றி அதனை தொடர்ந்தனர். 2022ல் வந்த அறிக்கை மறைக்கப்பட்டது. முந்தைய ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே முறைகேடுகளை செய்வதற்காகவே அந்த அறிக்கையை மறைத்தனர் என்றார்.
