மக்களவையில் விவாதத்தில் பிரதமர் பங்கேற்காததற்கு எதிர்க்கட்சிகளே முழுப்பொறுப்பு: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

பாட்னா: மக்களவையில் விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் இருந்ததற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், ‘‘ நாங்கள் எதற்கும் பயப்படவில்லை என்பதை நான் மிகத் தெளிவாக கூற விரும்புகிறேன். நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்.

அவை மார்ஷல்களை அழைத்து வந்து அவைக்குள் எங்கள் எதிர்ப்பாளர்களை எளிதில் அடக்கியிருக்க முடியும். ஆனால் அத்தகைய ஜனநாயக விரோத நடத்தையில் நாங்கள் நம்பிக்கை கொள்வதில்லை. எனவே ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர நாங்கள் முயற்சித்தோம். ஆனால் 40-50 எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து மோசமாக பேசிய பிறகு நாங்கள் ஒரு மாறுபட்ட முடிவை எடுத்தோம்.

அவர்கள் சண்டைக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதையும் பிரதமர் அவைக்கு வராமல் இருப்பதே நல்லது என்பதையும் நாங்கள் உணர்ந்தோம். எனவே தான் மாநிலங்களவையில் விரிவான உரையாற்றிய பிரதமர் எங்களது வேண்டுகோளின் பேரில் மக்களவையில் நடந்த விவாதத்தை தவிர்த்தார். நிச்சயமாக எங்களிடம் பெரும்பான்மை இருந்தது. எனவே நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது’’ என்றார்.

Related Stories: