ஜெகன்மோகன் பேரணி கூட்ட நெரிசலில் 2 பேர் பலி

திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான அம்பதி ராம்பாபு அண்மையில் கைது செய்யப்பட்டார். இதேபோல் முதல்வரை அவதூறாக பேசியதாகக்கூறி குண்டூரில் முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷின் வீட்டின் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்றுமுன்தினம் தாடேபள்ளி இல்லத்திலிருந்து மங்களகிரி பைபாஸ், காஜா மேற்கு பைபாஸ், நல்லகுண்டா மற்றும் குண்டுபள்ளி வழியாக இப்ராகீம்பட்டணம் வழியாக பேரணியாக சென்றார். அவரை வரவேற்க அக்கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இப்ராகீம்பட்டணத்தில் சென்றபோது அதேபகுதியை சேர்ந்த ராம்பாபு (42) என்பவர் கூட்டநெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து இறந்தார்.

இதேபோல் பார்கவ் (23) என்பவர் ஜெகன்மோகன் ரெட்டியை பின்தொடர்ந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் விழுந்து தலையில் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே போலீஸ் அனுமதியின்றி கூட்டம் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

Related Stories: