சித்தூர்: சித்தூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சலுக்கு 40 ஆயிரம் கோழிகள் பலியாகியுள்ளதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அதிகரித்து வருகிறது. சதும் மண்டலம் பகுதியில் கடந்த சில வாரங்களில் சுமார் 50 ஆயிரம் நாட்டுக்கோழிகள் இறந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பிராய்லர் கோழி பண்ணைகளிலும் சுமார் 40 ஆயிரம் கோழிகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சதும் மண்டலம் அம்மாகரிப்பள்ளி, கம்பம்வாரிப்பள்ளி மற்றும் புட்டவாரிப்பள்ளி கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் ஏராளமான கோழிகள் அடுத்தடுத்து இறந்து வருகிறது. ஏற்கனவே கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்துள்ளன.
இதுகுறித்து மண்டல வருவாய்த்துறை அதிகாரி ரமிலா மற்றும் கால்நடை துறை மருத்துவர்கள் பலியான கோழிகளின் மாதிரிகளை சேகரித்து விஜயவாடாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வருகின்றனர். இவற்றில் பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் தீவிர தடுப்பு பணியை மேற்கொண்டுள்ளது.
