புதுடெல்லி: பொருளாதார அல்லது ஏற்றுமதி தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து மலிவான கச்சா எண்ணெய்யை அதிக அளவில் கடத்தி சர்வதேச கடல்பரப்பில் உள்ள டேங்கர் கப்பல்களுக்கு மாற்றுவதன் மூலமாக லாபம் ஈட்டுவதற்கு சர்வதேச எண்ணெய் கடத்தல் கும்பல் முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்கு கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டிஜிட்டல் கண்காணிப்பு நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய கடலோர காவல்படை நடுக்கடலில் மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக மும்பை கடற்கரையில் இருந்து சுமார் 100கடல் மைல் தொலைவில் மேற்கே ஒரு சர்வதேச எண்ணெய் கடத்தல் கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய சில கப்பல்களை கைப்பற்றி அந்த கும்பலின் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும் விசாரணைக்காக கப்பல்கள் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு இந்திய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
