காங்கயம் அரசு மருத்துவமனைக்கு 58 படுக்கை வசதிகளுடன் ரூ.12 கோடியில் புதிய கட்டிடம்

* காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

காங்கயம் : காங்கயம் அரசு மருத்துவமனையில் ரூ.12 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக காங்கயம் அரசு மருத்துவமனையில் ரூ.12 கோடியில் 58 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமை தாங்கினார். கே.இ.பிரகாஷ் எம்.பி முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். காங்கயம் அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ரூ.12.கோடி மதிப்பீட்டில் மூன்று தளங்களுடன் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் மொத்தம் 58 படுக்கை வசதிகள் மற்றும் 4 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தரைதளத்தில் வரவேற்பறை, கண் சிகிச்சை, எலும்பு சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, வெளிப்புற நோயாளிகள் பிரிவு,மருந்தக அறை,அல்ட்ரா ஸ்கேன், எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன்அறை, ரத்தவங்கி, தலைமை மருத்துவ அலுவலர்அறை. கழிவறைகள் மற்றும் சாய்தள வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் பெண்களுக்கான அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு,மருத்துவர் மற்றும் செவிலியர்அறை, அறுவை அரங்கு (மகப்பேறு), அறுவை அரங்கு (பொது மருத்துவம்) பெண்களுக்கான அறுவை சிகிச்சைக்கு முன் கவனிப்பு பிரிவு, கழிவறை மற்றும் சாய்தள வசதிகளுடன் உள்ளது.

2ம் தளத்தில் கண் அறுவை சிகிச்சை பிரிவு, மருத்துவர் மற்றும் செவிலியர்அறை, அறுவை அரங்கு, (கண்சிகிச்சை) மகப்பேறு பிரிவு, கழிவறை மற்றும் சாய்தள வசதிகளுடன் உள்ளது.

3ம் தளத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிகிச்சை பிரிவு,மருத்துவர் மற்றும் செவிலியர் அறை, கழிவறை மற்றும் சாய்தளவசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. சுகாதார துறை சார்பில் விரைவில் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பணியமர்த்த தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மீரா, திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோண்மணி, தாராபுரம் ஆர்டிஓ பெலிக்ஸ் ராஜா, காங்கயம் நகர்மன்ற தலைவர் சூரியபிரகாஷ், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) முத்து சரவணன், காங்கயம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சந்திரசேகர்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், நகர செயலாளர் சேமலையப்பன், ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ், தமிழ்செல்வன், பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: