தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே 2026 சட்டப்பேரவை தேர்தல் களைகட்ட தொடங்கிவிட்டது. பாஜக கடிவாள பிடியால் அதிமுக, தேஜ கூட்டணிக்குள் நுழைந்துள்ளது. பல்வேறு கோஷ்டிகளாக பிரிந்துபோன அதிமுகவின் ஒரு கிளையாக டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக செயல்படுகிறது. நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜ கூட்டணியில் அதிமுகவின் கிளையான அமமுகவும் இணைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி செயல்பாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட வேண்டும். அதிமுக ஒரணியில் நிற்க வேண்டுமென குரல்கொடுத்த டிடிவி, தற்போது பாஜவின் கூட்டணியில் அதிமுகவோடு இணைந்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தொகுதி பங்கீட்டில் அமமுக தரப்புக்கு இரட்டை இலக்கு மற்றும் மாநிலங்களவை எம்பி பொறுப்பு என பல்வேறு நிலைப்பாட்டோடு அமமுக தனது அஸ்திவாரத்தை கூட்டணியில் அடித்தளமாக கொண்டு செயல்படுவதாக அக்கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் அமமுக கடலூர் மாவட்டத்தில் 3வது அணியாக நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட தொகுதிகளில் களம்கண்ட நிலையில் மீண்டும் கடலூர் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான ஆயத்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாவட்ட தலைநகரான கடலூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத் வாக்குறுதிகளை முழுமைப்படுத்தாததால், அதிருப்தி நிலவி வரும் நிலையில் 2021 தோல்வியை தொடர்ந்து, தற்போதும் கட்சியினர் போராடி களம் கண்டாலும் கரைசேர முடியாது என்ற கருத்தே நிலவி வருகிறது.
இதனால் பாஜ கூட்டணியில் உள்ள டிடிவி அணியினர் மீண்டும் கடலூருக்கு குறிவைத்துள்ள நிலையில், டிடிவியின் சமூக வாக்குகளை கணிசமாக கொண்டுள்ள கடலூரில் களம் காணலாமா என புதுக்கணக்கு போட்டு வைத்துள்ளார்களாம். அதற்கான அண்டர்கிரவுன்ட் வேலைகளையும் மேற்கொள்ள கட்சி தலைமை கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகவும் தகவல் கசிகிறது. அமமுகவின் இந்த அதிரடி மூவ் கடலூர் மாவட்ட அதிமுக முக்கிய புள்ளிகளைகூட கதிகலங்க செய்துள்ளது.
ஏற்கனவே, கடலூர் மாவட்டத்தில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக பார்க்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 6 பேருக்கு 6 தொகுதிகளில் சீட் வேண்டும் என இபிஎஸ்சுக்கு பிடியை இறுக்கியுள்ள நிலையில், பாஜ மற்றும் அமமுக நிலைப்பாட்டால் போட்டா போட்டி சூழல் நிலவுகிறதாம். இதனால் தங்களுக்கு சீட்டு கிடைக்குமா? என அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் விஐபிகளுக்கே தலைவலி ஏற்பட்டுள்ளதாம். தலைமைகள் கைகோர்த்து நின்றாலும், தொண்டர்கள் மட்டத்தில் ஒருங்கிணைப்பு என்பது இப்பகுதியில் தவிடு பொடியாகவே உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
