ஹராரே: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 16ஆவது இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் ஜன.15இல் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேயில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்தது.
இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்தின் பந்து வீச்சை நாலாபுறமும் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். 80 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி தலா 15 சிக்ஸர்கள், பவுண்டரிகளுடன் 175 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.2 ஓவரிலேயே 311 ரன்கள் எடுத்து அல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அம்பரீஷ் 3 விக்கெட்டுகள், தீபேஷ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இளையோர் உலகக்கோப்பை போட்டியில் 6வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன் 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி கோப்பையை வென்றிருந்தது.
