ரூ.9 கோடி செக் மோசடி வழக்கு; திகார் சிறையில் பிரபல நடிகர் சரண்: நீதிமன்றம் விதித்த தண்டனையால் பரபரப்பு

 

புதுடெல்லி: காசோலை மோசடி வழக்கில் இந்தித் திரைப்பட நடிகர் ராஜ்பால் யாதவ் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தித் திரைப்பட நடிகர் ராஜ்பால் யாதவ் கடந்த 2010ம் ஆண்டு தான் இயக்கிய திரைப்படத்திற்காக டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 5 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த அவர் வழங்கிய காசோலைகள் வங்கியில் பணம் இன்றித் திரும்பியதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தவறான தகவல்களைத் தாக்கல் செய்ததற்காக அவர் ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்திருந்தார்.

தற்போது வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகை சுமார் 9 கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில், கடனைத் திருப்பித் தராததால் அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய ராஜ்பால் யாதவின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக நிராகரித்தது. ‘சட்டம் எப்போதும் கீழ்ப்படிதலுக்குப் பரிசளிக்குமே தவிர அவமதிப்பை ஒருபோதும் ஏற்காது’ என்று நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா தனது தீர்ப்பில் கடுமையாகக் குறிப்பிட்டார்.

தான் வாங்கிய தொகையில் ஒரு பகுதியை உடனடியாகச் செலுத்துவதாக அவர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்ட போதிலும், அதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அன்று மாலையே டெல்லி திகார் சிறையில் அவர் சரணடைந்த நிலையில், போலீசார் அவரைச் சிறையில் அடைத்தனர்.

Related Stories: