டெல்லி: உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக சார்பில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் தாக்கல் செய்த இந்த மசோதாவில் நீதிபதிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப அரசியல் சாசன பிரிவுகளை திருத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது, உச்சநீதிமன்ற கிளைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பி.வில்சன் தெரிவித்தார்.
அதைப்போன்று அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் காணொளி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடத்துவதை உறுதி செய்யும் தனி நபர் மசோதாவையும் வில்சன் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார். அனைத்து நிதிமன்றங்களில் ஆன்லைன் மூலம் வழக்கு விசாரணை நடத்தப்பட்டால் வழக்கு தாமதமாவது, செலவுகள் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற கிளைகளை நாட்டின் பிற பகுதிகளில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியல் சாசன பிரிவுகள் 15,16, 124, 217, 224, 130 ஆகியவற்றை திருத்த வேண்டும் என கூறினார்.
