திருவொற்றியூர், புழலில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.20 கோடி நிலம் அபகரிப்பு: ஆசாமி கைது; கூட்டாளிகளுக்கு வலை

 

ஆவடி: திருெவாற்றியூர், புழலில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிப்பு விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களது கூட்டாளிகளை போலீசார் தேடி வரு கின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரமதி (57). இவர், கடந்த வருடம் ஆவடி காவல் ஆணை யரகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 1991ம் ஆண்டு திருவொற்றியூரில் 1200 சதுரடி இடத்தை விஜயா என்பவரிடம் இருந்து வாங்கினேன்.

இந்நிலையில் என்னுடைய சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் ரேவதி என்பவர் 1970ன்படி பாகப்பிரிவினை மூலம் தனக்கு கிடைத்ததாக குறிப்பிட்டு, போலி ஆவணம் தயாரித்து கிரைய பத்திரம் தயார் செய்து திருவொற்றியூர் பெரியார்நகர் பகுதியை சேர்ந்த சங்கர் (62), பம்மல் சங்கர்நகர் பகுதியை சேர்ந்த பெருமாள்சாமி (54) ஆகியோருக்கு 2013ம் ஆண்டு பொது அதிகாரம் கொடுத்துள்ளார். அதன்பின் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு 2018ம் ஆண்டு கிரைய பத்திரம் செய்துகொடுத்துள்ளனர்.

தற்போது நிலத்தின் மதிப்பு ரூ.70 லட்சம். எனவே, போலி ஆவணம் தயாரித்து எனக்கு சொந்தமான நிலத்தை மோசடி செய்த ரேவதி, சங்கர், பெருமாள்சாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுதரவேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார். இதுபோல் புழல் கிராண்ட்லைன் பகுதியை சேர்ந்த வசந்தி (60) என்பவர் கடந்த வருடம் ஆவடி காவல் ஆணை யரகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது: புழல் கிராண்ட்லைன் கிராமத்தில் எனது தந்தை கந்தசாமிக்கு சொந்தமான 1736 காலி மனையை 1975ம் ஆண்டு கிரையம் பெற்று அனுபவத்தில் இருந்தது.

1996ல் தந்தை காலமான பிறகு எங்களது வாரிசுகளான கமலா, ராணி, வசந்தி, விஜயா, செல்வராஜன் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், செல்வராஜன் என்பவர் போலியான கிராம நத்தம் பட்டா தயார் செய்து சிட்டா, அடங்கல் பெற்று அம்மாயி என்பவரை வைத்து செல்வராஜனின் மனைவி ஜெய லட்சுமிக்கு செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். தற்போது நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம். போலி ஆவணங்கள் மூலம் எங்களுடைய சொத்தை அபகரித்த அம்மாயி, செல்வராஜ், அவரது மனைவி ஜெய லட்சுமி மற்றும் சாட்சி கையெழுத்து போட்ட தமிழரசன் (41) மீது தக்க நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இதையடுத்து ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் செந்தில்குமார், கூடுதல் காவல் துணை ஆணையாளர் ஸ்டீபன் மற்றும் காவல் உதவி ஆணையாளர் கோவிந்த் தலைமையில் ஆய்வாளர் வள்ளி தலைமையில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நில மோசடி தொடர்பாக புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த தமிழரசனை நேற்று கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே செல்வராஜ், அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: