நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் 10 ஆண்டில் 1,310 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு: மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்படும் சிறை கைதிகள்

 

ஐதராபாத்: விசாரணை நீதிமன்றங்கள் விதிக்கும் மரண தண்டனைகளை உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்வது அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் சுமார் 1,310 மரண தண்டனைகளை விதித்துள்ளன. ஆனால் இதில் வெறும் 106 தண்டனைகளை மட்டுமே உயர் நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன. கடந்த 2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையில் உயர் நீதிமன்றங்களால் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனைகளில் ஒன்றைக்கூட உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவில்லை.

விசாரணை நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளுக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களின் முடிவுகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதை இந்த புள்ளிவிபரங்கள் தெளிவாக காட்டுகின்றன. கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் 94 வழக்குகளில் தொடர்புடைய 128 நபர்களுக்கு விசாரணை நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் சிறைகளில் மரண தண்டனை கைதிகளாக 574 பேர் உள்ளனர். அதேவேளையில் 2025ம் ஆண்டில் மட்டும் உயர் நீதிமன்றங்கள் 22 வழக்குகளில் 35 நபர்களை விடுதலை செய்துள்ளன.

உச்ச நீதிமன்றம் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு 10 மரண தண்டனை கைதிகளை விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்கள் சராசரியாக 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறையில் இருந்துள்ளனர். ‘மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்படுவது விசாரணை மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது’ என ஆய்வறிக்கை
கூறுகிறது. இதுகுறித்து நால்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஸ்கொயர் சர்க்கிள் கிளினிக் அமைப்பின் இயக்குனர் ஷ்ரேயா ரஸ்தோகி கூறுகையில், ‘மரண தண்டனை வழக்குகளில் அதிகப்படியான விடுதலைகள் குற்றவியல் சட்ட அமைப்பில் உள்ள ஆழமான விரிசலை வெளிப்படுத்துகின்றன.

மூன்றில் ஒரு பங்கு வழக்குகள் விடுதலையில் முடிவது விசாரணை மற்றும் வழக்குத் தொடுப்பதில் உள்ள தோல்விகளைக் காட்டுகிறது. இந்த தவறுகள் மக்களின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் பல ஆண்டுகள் பறிக்கின்றன’ என்று தெரிவித்தார். மேலும் இதுபற்றி மைத்ரேயி மிஸ்ரா கூறுகையில், ‘விசாரணை முகமைகள், அரசுத் தரப்பு மற்றும் கீழமை நீதிமன்றங்கள் என பல நிலைகளில் தோல்விகள் இருப்பதை உச்ச நீதிமன்றமே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது’ என்று கூறினார்.

Related Stories: