சென்னை: திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம் என விருதுநகரில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு நாளை நடைபெறுவதை ஒட்டி முதலமைச்சர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘1949ல் இளைஞர்களால் தொடங்கப்பட்ட கட்சிதான் திராவிட மாடல்.
திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம். திமுகவை வளர்த்த இளைஞர்கள்தான் தற்போது அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். எங்களுக்கு அடுத்தபடியாக திமுகவை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கின்ற பணியை உதயநிதி சிறப்பாக செய்கிறார்.
திமுக இளைஞரணியில் தற்போது வரை 5 லட்சம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 78 கழக மாவட்டங்களில் சமூகவலைதளங்களுக்கு என்று நிர்வாகிகளை நியமித்துள்ளோம். திருவண்ணாமலையில் நடத்திய இளைஞரணி மாநாட்டால் எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டது. மற்ற கட்சிகள் பின்பற்றும் வழிமுறைகளை திமுக இளைஞரணிதான் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.
பிப்.7ம் தேதி விருதுநகரில் இளைஞரணி கூட்டம் என்று சொன்னதும் புது உற்சாகம் வந்தது. எதற்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதை விருதுநகர் மாநாட்டில் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்’ என விருதுநகரில் நாளை நடைபெறும் இளைஞரணி தென் மண்டல மாநாட்டில் பங்கேற்க திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
