சென்னை : உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். கார்ல் மார்க்ஸ் அவர்களின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் சென்னையில் அவருக்குப் புதிதாகத் திருவுருவச் சிலை நிறுவப்படும் என அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின் பயனாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சென்னை, எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகம், அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மாமேதை கார்ல் மார்க்ஸின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்தார்.அப்போது கார்ல் மார்க்ஸ் பற்றிய சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.வெளியிட்டுள்ள பதிவில், “மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு: சிவந்தது சென்னை! “இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர ஒன்றுமில்லை. அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது” என உலகத் தொழிலாளர்களை ஒன்று திரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலை கன்னிமாரா பொதுநூலக வளாகத்தில் நிலைகொண்டது! நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக்கொள்வோம். அல்லவை ஆதிக்கம் செலுத்தப் பார்த்தால் தடுத்து நிறுத்துவோம். இதுதான் திராவிடன் மாடல்!”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
