தென்காசி, பிப்.5: தென்காசி மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்ந்த திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லலிதா, கலெக்டர் கமல்கிஷோர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா, உதவித்தொகை குறித்தும், ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும், மேலும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்ட பணிகளும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் பணி மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லலிதா அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தென்காசி உதவி கலெக்டர் வைஷ்ணவிபால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, கலெக்டர் நேர்முக உதவியாளர் சுப்புலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
