கன்னியாகுமரிக்கு 3 நவீன புதிய பயணிகள் படகுகள் கோவாவில் கட்டுமான பணி அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு: இம்மாத இறுதியில் ஒரு படகை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: கன்னியாகுமரிக்கு 3 நவீன புதிய பயணிகள் படகுகளின் கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு கோவா சென்று ஆய்வு மேற்கொண்டார். இம்மாத இறுதியில் ஒரு படகை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடந்த 31.12.2024 அன்று நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியின் போது, முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் இருந்து திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் எளிதாக சென்றடையும் வகையில், படகு சவாரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மூன்று புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த மூன்று படகுகளுக்கும் காமராசர், மார்சல் நேசமணி, ஜி.யு.போப் ஆகியோரின் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்தார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் நிதியில் மூன்று புதிய பயணிகள் படகுகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

இதனை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கோவா கப்பல் கட்டும் தளத்திற்குச் சென்று அங்கு நடந்து வரும் படகு கட்டுமானப் பணிகளை களஆய்வு செய்தார். முதலாவதாக, காமராசர் பெயரிடப்பட்ட பயணியர் படகு கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இதற்கான வெள்ளோட்டம் மற்றும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளன.

இம்மாதம் இறுதிக்குள் கன்னியாகுமரி துறைமுகத்தில் தமிழ்நாடு கடல்சார் வாரியத்திடம் காமராசர் பெயரிட்ட முதல் பயணியர் படகு ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருக்கிறது. மீதமுள்ள மார்சல் நேசமணி, ஜி.யு.போப் ஆகிய இரண்டு படகு கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்துதருமாறு கட்டுமான நிறுவன அலுவலர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.

இந்த களஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முதன்மைச் செயலாளர், துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வெங்கடேஷ், மாநில துறைமுக அலுவலர் கேப்டன் அன்பரசன் மற்றும் நெடுஞ்சாலைதுறையின் சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: