சென்னை: சென்னை திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றுவதற்கு தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தொழில்நுட்ப டெண்டரில் பங்கேற்க விண்ணப்பித்த போபாலை சேர்ந்த திலீப் பில்ட்கான் நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, டெண்டர் இறுதி செய்வதற்கு முன்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதைஎதிர்த்து திலீப் பில்ட்கான் நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்வு செய்யப்படும் நிறுவனத்துக்கு டெண்டர் ஒப்பந்த பணிகளை வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
