சென்னை விமான நிலையத்தில் 940 கிராம் தங்கப் பசை உள்பட ரூ.4.09 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 940 கிராம் தங்கப் பசை, 4.09 கோடி ஹவாலா பணம் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். துபாயில் இருந்து நேற்று அதிகாலை, ஏர்இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த சுமார் 28 வயது இளைஞர் ஒருவர் மீது சுங்கத்துறை ஏர்இன்ெடலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரை சோதனையிட்டபோது, உள்ளாடைக்குள் 3 உருளைகள் மறைந்து வைத்திருந்தார். அதில் 24 காரட் சுத்தமான தங்கப்பசை 940 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.36 கோடி. அவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் கடத்தல் குருவி என்றும், தங்கத்தை வாங்கிச் செல்வற்கு கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர், சென்னை விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் நிற்பதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து, ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் வெளியே வந்து, அங்கு நின்றிருந்த சென்னையைச் சேர்ந்த கடத்தல் ஆசாமிகள் இருவரையும் கைது செய்தனர். இதற்கிடையே நேற்று இரவு சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த சுமார் 35 வயது பெண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது கையில் எடுத்து செல்ல வைத்திருந்த பெரிய பையை திறந்து சோதித்தனர். அதனுள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் யூரோ கரன்சிகள் இருந்தன. இதையடுத்து அந்த பெண் பயணியின் பயணத்தை ரத்து செய்தனர். பின்பு, அந்த பெண் பயணியை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தி, அவர் பையில் இருந்த வெளிநாட்டு பணத்தை எண்ணி பார்த்தார்.

மொத்தம் ரூ.2.73 கோடி மதிப்புடைய கடத்தல் பணம் இருந்ததை பறிமுதல் செய்தனர். கடத்தல் பெண் பயணியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கடத்தல் குருவி என்றும், இவரிடம் இந்த பணத்தை யாரோ ஒருவர், கொடுத்து அனுப்பி உள்ளதும் தெரியவந்தது. எனவே இந்த பணம் கணக்கில் இல்லாத ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. ஹவாலா பணத்தை ரகசியமாக, வெளிநாட்டிற்கு கடந்த முயன்ற மர்ம ஆசாமி யார் என்று விசாரணை நடக்கிறது. சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: