பொதுத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையமே அறிவிக்கும். ஆனால் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே முந்திக் கொண்டு தேர்தலுக்கு நாள் குறித்து விட்டது நாம் தமிழர் கட்சி. இந்த கட்சி நெல்லையில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களில் மே 1 என தேர்தல் தேதியை குறிப்பிட்டுள்ளது. இது யார் கொடுத்த அதிகாரம்.
தேர்தல் தேதியை முடிவு செய்ய வேட்பாளர் யார்? அரசியல் கட்சி எது? என அந்த வழியாக செல்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அது மட்டுமல்லாது ‘செந்தமிழன்’ எனக் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ள அந்த சுவர் விளம்பரத்தில் தமிழ் வார்த்தைகள் கூட சரியாக பயன்படுத்தப்படவில்லை. விவசாயி சின்னத்துடன் ஏர் கலப்பையுடன் இருக்கும் விவசாயி படத்தை வரைந்துள்ளனர். ஆனால் எழுத்தில் கோட்டை விட்டு விட்டனர். ‘உழவு’ இல்லையேல், உயிர்கள் இல்லை என்பதற்கு பதிலாக ‘உலவு’ இல்லையேல், உயிர்கள் இல்லை என எழுதிச் சென்றுள்ளனர்.
இந்த விளம்பரத்தை பார்த்து அந்த வழியாகச் செல்பவர்கள், ஐயா, இதுவாய்யா…தமிழ் எழுத்து, செந்தமிழன் என குறிப்பிட்டு விட்டு உழவு என்பதற்கு பதிலாக உலவு என்று எழுதப்பட்டுள்ளதே…. உழவு என்றால் ஏர் கலப்பையுடன் விவசாய நிலங்களில் உழுது நிலத்தை விவசாயத்திற்கு தயார்படுத்துவதை குறிக்கும். அதை விட்டு உலவு என எழுதியுள்ளது. சாலையில் உலவுவதை தான் குறிக்கும். இப்படித்தான் கட்சியும் இருக்கும் போல….. என சொல்லி சிரிக்கின்றனர்.
