மதுரை: கரூரைச் சேர்ந்த குணசீலன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வடக்குமலை கிராமத்தில் 93 ஏக்கர் பட்டா நிலம் வைத்துள்ளேன். மழைநீரை சேமிக்க எனது பட்டா நிலத்திலேயே அணை கட்ட உரிய அனுமதி பெற்று, சுமார் ரூ.2 கோடி செலவில் அணையை கட்டி முடித்துள்ளேன். இந்த பகுதியில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், யானைகள் ஊருக்குள் வருவதாகவும், யானையின் வழித்தடம் பாதிப்பதாகவும் கூறி, பணிகளை நிறுத்துமாறும், அணையை அகற்றுவது தொடர்பாகவும் வனத்துறையினர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இந்த பகுதியில் யானைகளே இல்லை. முறையாக அனுமதி பெற்ற பிறகு, நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதம். எனவே, வனத்துறையினரின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுதாரருக்கும், வனத்துறைக்கும் இடையே தகராறு உள்ளது தெரிகிறது. இருந்தாலும், ஏற்கனவே கட்டப்பட்ட அணையை இடிக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.
