அடிப்படை வசதி கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

ராமநாதபுரம், பிப். 4: ராமநாதபுரம் ஒன்றியம், பேராவூர் வடக்கு குடியிருப்பு பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு குடிநீர், தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி நேற்று காலி குடங்களுடன் பெண்கள் ராமநாதபுரம் புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இது குறித்து பேராவூர் வடக்கு குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் கூறும்போது, ‘‘எங்கள் குடியிருப்பில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு குடிநீர் வசதி பல ஆண்டுகளாக இல்லை. காவிரி கூட்டுக் குடிநீரும் வருவதில்லை. குடிநீர் எடுக்க 1 கி.மீ தூரம் நடந்து பேராவூர் மெயின் சாலைக்கு வந்து எடுத்துச் செல்கிறோம், தள்ளுவண்டிகளில் குடங்களை வைத்து தள்ளி கொண்டு செல்லும் போது வாகனங்களால் விபத்து அச்சம் உள்ளது. இரவு நேரங்களில் வந்து செல்ல தெருவிளக்கு வசதி இல்லை. சாலை வசதியில்லை, இதனால் மழைக்காலத்தில் தண்ணீர், சேரு,சகதியுமான பாதையில் நடந்து செல்கிறோம்.எனவே எங்கள் குடியிருப்புக்கு குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதிகள் செய்து தரநடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Related Stories: