ராமநாதபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்

ராமநாதபுரம். பிப். 4: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணை தலைவர் தனலெட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டததில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், வருவாய் கிராம உதவியாளருக்கு வழங்கக்கூடிய ரூ.6,750ஐ ஓய்வூதியமாக வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சாலை மறியல் போராட்டத்தால் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 500 பெண் ஊழியர்கள் உள்பட 510 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுவித்தனர்.

Related Stories: