முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு பள்ளி கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை

நாகர்கோவில், பிப்.4: பள்ளி கல்வி இணை இயக்குநர் (மேல்நிலை கல்வி) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-24, 2024-25 ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் 22.01.2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு எமிஸ் இணைய தளம் வாயிலாக ஆன்லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. தெரிவு செய்யப்பட்ட அனைத்து பணி நாடுநர்களும் நேரடி நியமன கலந்தாய்வில் கலந்து கொள்ளத்தக்க வகையில் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இருந்து கலந்தாய்வு நாள் தெரிவிக்கப்பட்ட உடன் பணிநாடுநர்களுக்கு உடன் தகவல் அளிக்கத் தேவையான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறது.

கலந்தாய்வு நடைபெறும் நாள் அன்று தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்பு சான்றிதழ்களுடன் ஜாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ், தமிழ்வழியில் படித்தத்திற்கான சான்றிதழ் ஆகியன மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் பணி நியமன ஆணை நாடுநர்களுக்கு கலந்தாய்வு அன்று வழங்கக் கூடாது. பணி நியமன ஆணை சென்னையில் நடைபெற உள்ள விழாவில் தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. கலந்தாய்வு நடைபெறுவது சார்ந்து அனைத்து ஆயத்த பணிகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: