செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது

செங்கல்பட்டு, பிப். 4: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.​ இந்த போராட்டத்தில், வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்படுவதைப்போல், சத்துணவு ஊழியர்களுக்கும் ₹6,750 சிறப்பு பென்ஷன் மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ₹19,500 ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். ​

சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் நிலையில் ₹15,700 அடிப்படை காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, 10 ஆண்டுகள் பணிமுடித்த தகுதியுள்ள பணியாளர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோஷமிட்டனர். ​இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ​இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களைப் காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories: