மாமல்லபுரத்தில் 2 நாட்கள் நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டில் 300 கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

மாமல்லபுரம், பிப்.4: மாமல்லபுரத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டில் 300 கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டியுள்ள போர் பாயிண்ட் ஷெரட்டான் நட்சத்திர ரிசார்ட்டில் உள்ள கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தொழில்துறை இணைந்து ‘தமிழ்நாடு உலகளாவிய சர்வதேச சுற்றுலா உச்சி மாநாடு-2026’ நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதையடுத்து, முதல்வர் முன்னிலையில் 65,937 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ரூ.22,795 கோடி மதிப்பீட்டில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதை தொடர்ந்து, ரூ.40 கோடியே 25 லட்சம் செலவில் முடிவுற்ற 3 சுற்றுலா மேம்பாட்டு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு காணொலி மூலம் திறந்து வைத்தார். மேலும், ரூ.8 கோடி மதிப்பீட்டில் 2 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். பின்னர், 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மாநாட்டில் சுற்றுலா தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள், மேம்பாட்டாளர்கள், ஆபரேட்டர்கள், ஓட்டல் நிறுவனங்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், டெவலப்பர்கள், முடிவெடுப்பாளர்கள், கூட்டாளர்கள், ஆதரவாளர்கள், சுற்றுலா வாகன நிறுவனங்கள், வர்த்தக நிபுணர்கள், தொழில் முனைவோர்கள் என உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரபல நிறுவனங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், 2வது நாளாக மாநாடு நேற்று காலை தொடங்கியது. இதில், மாமல்லபுரம் சுற்று வட்டார கல்லூரிகளைச் சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்கள் மாநாட்டு அரங்கிற்கு அருகே 100 மீட்டர் நீளம், 50 மீட்டர் அகலம் கொண்ட அரங்கில் கோ-ஆப்டெக்ஸ், சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். அப்போது, எத்தனை கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது, ஒப்பந்தங்களால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை மாணவர்கள் கேட்டு தெரிந்துகொண்டனர்.

Related Stories: