சக ஊழியரை கொன்ற தேவாலய ஊழியருக்கு ஆயுள் சிறை

சென்னை, பிப்.4: ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் ஈனோஸ் (62). இவர் ஆவடியில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு, ஹெலன் (59) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வெளிநாட்டில் மகன்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மனைவியுடன் வசித்து வந்த ஈனோஸ், பட்டாபிராம் வள்ளலார் நகரில் உள்ள சிபிஎம் பெந்தேகோஸ்தே தேவாலயத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தமோசஸ் (32) என்பவர், இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதற்கு அவர் அதிக பணம் கேட்பதாக, ஈனோஸிற்கு புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து மோசஸிடம் கேட்டுள்ளார். மேலும், , இனிமேல் பிணங்களை அடக்கம் செய்வதற்கு அதிக பணம் கேட்கக்கூடாது என்றும், கண்டித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த மோசஸ், அவரை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 3ம்தேதி ஈனோஸ், தேவாலயத்தில் பணியில் இருந்தார். அப்போது மோசஸ், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஈனோஸை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால், ஈனோஸ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

இதில், தொடர்புடைய மோசஸை, பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய் கிருஷ்ணன் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இவ்வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு வழக்கறிஞர் எஸ்.மூர்த்தி ஆஜராகி வாதாடி வந்த நிலையில், நேற்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டாக்டர் ஜூலியட் புஷ்பா தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றவாளி மோசஸிற்கு ஆயுள் தண்டனையும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால், மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து, பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், குற்றவாளி மோசஸை சென்னை புழல் சிறையில் அடைத்தார்.

Related Stories: