வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி 3 வீடுகள் சேதம்: 10க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்

 

 

வால்பாறை: வால்பாறை அருகே நள்ளிரவு காட்டு யானை தாக்கி 3 வீடுகள் சேதமடைந்தது. கள அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான சிங்கோனா எஸ்டேட்டில் நள்ளிரவு வனத்தில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் புகுந்து அங்கிருந்த ஜானகி, பால்ராஜ் மற்றும் ஜான்பால் ஆகியோரது வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. யானை உடைக்கும் சத்தம் கேட்டு வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் அலறியடித்து ஓடி யானைகளிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்நிலையில் இன்று காலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘‘காட்டு யானைகள் அட்டகாசத்தால் எங்களுக்கு எந்த பாதுகாப்பு இல்லை, நிம்மதியாக தூங்க முடியவில்லை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு சேரவேண்டிய பணப்பலன் உள்ளிட்டவைகளை கொடுத்து எஸ்டேட்டை விட்டு அனுப்பி வைக்குமாறும், இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: