இன்று முதல் காத்திருப்பு இயக்கம் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்: முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பத்தாண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் பணியாளர்கள் தொடர்ந்து முறையிட்டும், போராடியும் வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி) கடந்த 2025 பிப்ரவரி 11 முதல் தொடர்ந்து போராடி வருகிறது. இந்த கால கட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், அரசின் கூடுதல் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.

இன்று (3ம்தேதி) முதல் காலவரையற்ற காத்திருப்பு இயக்கத்தை அறிவித்துள்ளனர். வேறு சில தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நீண்ட கால பணித் தொடர்ச்சியுடன் பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நியாயமானவை என்பதை முதல்வர் கவனத்துக்கு தெரிவித்து டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகள் மீது நேரடியாக தலையிட்டு நிறைவேற்றித் தர கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: