மிசா கைதியாகி நேற்றுடன் 50 ஆண்டுகளை கடந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகளுக்கு முன் மிசாவில் கைதியாகி சிறைப்பட்ட நாள் நேற்றுடன் 50 ஆண்டுகளைக் கடந்தது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 மே 7ம் நாள் ஆட்சிப்பொறுப்பேற்று ஓய்வு சிறிதும் இன்றி உழைத்து வருவதின் பயனாக தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு இந்தியாவின் சிறந்த மாநிலம் எனும் புகழைச் சூடியுள்ளது. இதற்கு முழு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான், தமிழ்நாடு முதல்வர் ஏதோ ஒரு விபத்தில் முதலமைச்சரானவர் அல்ல, 14 வயது முதல் கோபாலபுரத்தில் இளைஞர் திமுக எனும் அமைப்பை உருவாக்கினார்.

அந்த அமைப்பு தான் பின்னர் திமுக இளைஞரணி என உருவாகி விழுதுகளாகி, திமுகவை வளர்க்க உதவியது. இந்த அமைப்பு வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்றால், அதை அன்று விதை போட்டு வளர்த்து அதன் செயலாளராக அமர்ந்து பட்டிதொட்டியெங்கும் சென்று கழகக் கொடிகளை ஏற்றி, கழகத்தை வளர்த்திட வழிகாட்டியதால் தான் என்று கூறுவது மிகையல்ல. 1975ம் ஆண்டு அன்றைய ஒன்றிய அரசு பிறப்பித்த நெருக்கடி நிலை எனும் நெருப்பாற்றில் நீந்தி வளர்ந்தவர் அவர். அவருடைய உழைப்பு, கொள்கை உறுதி இவற்றைக் கண்டு அன்றே அஞ்சியது ஒன்றிய அரசு.

அதன் காரணமாக 1976 ஜனவரி 31ம் நாள் கலைஞர் தலைமையிலான திமுக அரசைக் கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியைப் புகுத்தி, தமிழ்நாடு முழுவதும் 500க்கு மேற்பட்ட திமுக தளகர்த்தர்களை எல்லாம் கைது செய்து, சிறையில் பூட்டி, சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய வரலாற்றை எவரும் மறந்து விட முடியாது. அந்த வரலாறு தான் ஒரு சாதாரண தொண்டன் மு.க.ஸ்டாலின் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் தலைவராக இந்தியாவின் தலைசிறந்த முதல்வராக உருவாக்கியுள்ளது. 1976 ஜனவரி 31ல் ஆட்சியைக் கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சி தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அன்று மாலையே காவல் துறை அதிகாரிகள் கோபாலாபுரம் இல்லத்திற்கு படையெடுத்து வருகிறார்கள். அவர்களைக் கண்ட கலைஞர், “என்ன, என்னைக் கைது செய்ய வந்திருக்கிறீர்களா? கைது செய்து கொள்ளுங்கள். நான் தயார்” என்கிறார்.

அதைக் கேட்ட காவல் துறை அதிகாரிகள் சிறிது கலக்கத்துடன், “ஐயா உங்களை கைது செய்வதற்காக அல்ல. உங்கள் மகன் ஸ்டாலினை கைது செய்ய எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது” என்று கூறினார்கள். அதை தொடர்ந்து கலைஞரிடம், “ஸ்டாலின் தற்போது வீட்டில் இல்லை. வெளியூர் நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறார். நாளை வருவார். வந்ததும் உங்களுக்கு தகவல் தருகிறேன். வந்து கைது செய்து செல்லுங்கள்” என்று கூறுகிறார். வீட்டைச் சோதனையிட வேண்டும் என்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள். உடனடியாக சோதனை செய்து கொள்ளுங்கள் என்கிறார் கலைஞர். மறுநாள் மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் வீடு வந்து சேர்ந்ததும், அவரிடம் போலீஸ் உன்னைக் கைது செய்ய வரும். தயாராக இரு என்று கூறிவிட்டு காவல் துறைக்கு உடனடியாகத் தகவல் தந்தார்.

காவல் அதிகாரிகள் அடுத்த சில நிமிடங்களில் கோபாலபுரம் இல்லம் வருகிறார்கள். அவர்களிடம் ஸ்டாலினை ஒப்படைக்கிறார். கைது செய்ய வந்த காவல் அதிகாரிகள் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயலும்போது, பொதுமக்கள் திரண்டு எதிர்க்கிறார்கள். அவர்களை விலகச் சொல்லி காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார் கலைஞர். கைது செய்யப்பட்ட நாள் 1976ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி. அன்று சிறையில் என்ன நடந்தது? நாடாளுமன்ற உறுப்பினராக சென்னை மேயராக திகழ்ந்த சிட்டிபாபு சிறைக் கொடுமைகளைப் பற்றி சிறையில் ஸ்டாலினை காவல்துறையினர் தாக்கி உதைத்துச் சித்ரவதை செய்ததைப் பற்றி ஒரு நூலே எழுதியிருக்கிறார்.

அந்த நூலின் பெயர் “சிட்டிபாபுவின் சிறை டைரி” ஸ்டாலின் மீது விழுந்த அடிகளை தாங்கியவர் காவல்துறையின் பூட்ஸ் காலால் தாக்கப்பட்டு அடைந்த காயத்தை ஆற்றுவதற்கு காவல் துறையே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சென்னை பொது மருத்துவமனைக்கு இன்றைய ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் அங்கேயே மறைந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தீர மறவர்களில் ஒருவராக வரலாற்றில் இடம் பெற்றுள்ளார் அந்த தியாக சீலர் சிட்டிபாபு. மிசா சிறையில் ஓராண்டு காலத்துக்கு மேல் அடைக்கப்பட்ட 2026ம் ஆண்டு பிப்ரவரி 2ம் நாள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். அந்த நாள் நேற்று 50 ஆண்டுகளைக் கடக்கிறது. இவ்வாறு திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: