தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் திராவிட கொள்கைகளுக்கும் பாசிச சக்திக்குமான போர்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் ‘‘திராவிட கொள்கைக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையேயான போர்’’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: வரும் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். இது திராவிடத்திற்கும், பாசிச சக்திகளுக்கும் இடையில் நடக்கும் போராக இருக்கப்போகிறது. திராவிட கருத்தியல் என்பது அனைவராலும் கடைபிடிக்கப்பட்டால், அது இந்தியாவை இன்னும் வலிமையாக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இவை வெறும் வார்த்தைகளோ, முழக்கமோ அல்ல. இது சுயமரியாதைக்கான பிரகடனம், சமூக நீதி மற்றும் மாநில உரிமைகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் வெளிப்பாடு.

திராவிட கருத்தியல் என்பது, பிரிவினையை தூண்டுவதல்ல. உண்மையில், அது பிரிவினைக்கு எதிரானது. திராவிடம் அனைவரையும் உள்ளடக்கியது. இது ஆதிக்கத்தால் விளையும் ஒருங்கிணைப்பை அல்ல, சமத்துவத்தின் மூலமான ஒற்றுமையையே வலியுறுத்துகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அரசு அலுவலகங்களில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடமே இல்லை. பெரும்பாலான வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் உயர்சாதியினராகவே இருந்தனர். இந்த தடைகளை தகர்த்து, அவற்றை மக்கள்மயப்படுத்தியது திராவிட இயக்கம்தான்.

மும்பை இந்தியாவின் பொருளாதார தலைநகராகவும், டெல்லி நிர்வாகத் தலைநகராகவும் இருப்பது போல, தமிழ்நாடு இந்தியாவின் சமூக நீதித் தலைநகராக திகழ்கிறது. மாநிலத்தின் கல்வி உரிமையில் ஒன்றிய அரசு தலையிடக் கூடாது’ என்று நாம் சொன்னால், பா.ஜ. கோபப்படுகிறது. சுகாதாரத் துறையில் ஆக்கிரமிப்பு செய்யாதீர்கள்’ என்று சொன்னால் பா.ஜ. எரிச்சலடைகிறது. மாநில அரசுகளின் அல்லது மக்களின் விருப்பத்தைப் பற்றி கவலைப்படாமல், எதையும் திணிக்கலாம் என்று ஒன்றிய அமைச்சர்களும், ஆளுநர்களும் நினைக்கிறார்கள்.

ஆனால், “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’’ என்ற முழக்கம் அரசியல் லாபத்துக்காகச் சொல்லப்பட்ட ஒன்றல்ல. உண்மையில், மாநில சுயாட்சியும் மொழி உரிமையும்தான் தி.மு.க.வின் உயிர். அதனால்தான், நம் முதலமைச்சர் இந்தி திணிப்புக்கு எதிராக உயர்த்திய குரல், நாடு முழுவதும் எதிரொலித்தது. கடந்த 10 ஆண்டுகளில், தமிழ்நாடு கோரிய நிவாரண நிதியில் வெறும் 17 சதவிகிதத்தை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி இருக்கிறது. இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும், முதலமைச்சர் பல்வேறு சிறப்புவாய்ந்த மக்கள் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இதுதான் திராவிட மாடல் அரசின் நடவடிக்கையாகும்.

பா.ஜ. விரும்புவது ஒற்றைத்தன்மை கொண்ட இந்தியாவை, ஒற்றுமையான இந்தியாவை அல்ல. அவர்களின் நோக்கமெல்லாம் ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே தேர்தல் என்பதுதான். மாநிலங்களை பா.ஜ. அழிக்கத் துடிக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பொம்மை அரசுகளை அமைக்க விரும்புகிறது. அதன் மூலம் டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் மாநிலங்களை இயக்க நினைக்கிறார்கள். அவர்கள் மாநிலங்களை நகராட்சிகளாக மாற்றப் பார்க்கிறார்கள்.

வரும் ஆண்டுகளில், திராவிட மாடல் தமிழ்நாட்டை, புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும், வலுவான இந்தியாவைக் கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றும். இந்த நேரத்தில், பா.ஜ. தமிழ்நாட்டைக் கைப்பற்ற எடுக்கும் எந்த முயற்சியும் பலனளிக்கப் போவதில்லை. எங்களை பொறுத்தவரை சமதர்மமே அனைத்திற்கும் மேலானது. சமதர்மம் என்பது அனைவரும் சமமான சமூகம், நீதியை அடிப்படையாக கொண்டு வழிநடத்தப்படும் நிர்வாகம். இங்கு சாதி அடிப்படையிலான பாகுபாட்டுக்கு இடமில்லை. சமூக நீதி, மாநில உரிமைகள், சுயமரியாதை ஆகியவற்றை வேர்களாக கொண்ட திராவிடத்தின் அவசியத்தை நாடு உணர தொடங்கியுள்ளது.

அதன்படி இந்தியா இதற்கு முன்பை விட வலுவாக எழும். வலுவான மாநிலங்கள், சுயமரியாதை உணர்வுள்ள மக்கள், அனைவருக்கும் சம வாய்ப்புகள் – இதுவே திராவிட மாடல், இதுவே வலுவான இந்தியாவுக்கான பாதை. இவ்வாறு அவர் பேசினார். திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் சமூக நீதிக்காக குரல் எழுப்பியது. மும்பை இந்தியாவின் பொருளாதார தலைநகராகவும், டெல்லி நிர்வாகத் தலைநகராகவும் இருப்பது போல, தமிழ்நாடு
இந்தியாவின் சமூக நீதித் தலைநகராக திகழ்கிறது”.

Related Stories: