பாஜகவுடன் இருப்பவர்கள் எல்லாருமே ஊழல்வாதிகள் தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை: பாஜகவுடன் இருப்பவர்கள் எல்லாருமே ஊழல்வாதிகள் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் கருத்தரங்கில் உரையாற்றிய அவர்; இந்திய அரசியலில் தனித்துவமான மாடல் திராவிட மாடல். தமிழ்நாட்டுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்திருப்பீர்கள். தமிழ்நாட்டில் 2ம் நிலை, 3ம் நிலை நகரங்கள் கூட வளர்ந்துள்ளன. திறமையாக ஆட்சி நடத்துவதால்தான் இந்தியாவில் யாரும் அடைய முடியாத 11.19 சதவீத வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது.

சமூகத்தில் எந்த பிரிவினரும் தனித்துவிடக்கூடாது என்பதால்தான் திமுக பார்த்து பார்த்து திட்டங்களை செய்கிறது. தேவைகளுக்கு ஏற்ப திமுக கொள்கைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக சொன்னால் சொன்னதை செய்யும் என்று மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தனர். மகளிர் உரிமைத் தொகையாக இதுவரை ரூ.33,461 கோடி வழங்கியுள்ளோம். விடியல் பேருந்து பயண திட்டத்தில் 13387 கோடி மதிப்பிலான பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.

திமுக ஆட்சி கொண்டுவந்துள்ள திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. நாட்டுக்கே வழிகாட்டி திராவிட மாடல் ஆட்சி என்பதற்கான அடையாளம் மற்ற மாநிலங்கள் எங்கள் திட்டங்களை பின்பற்றுவதுதான். நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம்; 2.15 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.

கலைஞர் நூலகம், கீழடி அருங்காட்சியகம், ஜி.டி.நாயுடு பாலம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம்எதிர்க்கட்சிகளால் முடியாது என்று சொல்லப்பட்ட திட்டங்களைக்கூட நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாட்டின் திட்டங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று சேர்ந்து மக்கள் பயனடைந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், மக்கள் நம்பிக்கையை பெற்றால்தான் வெற்றி பெற முடியும். கற்பனை குற்றச்சாட்டுகளை கூறி எங்கள் மீது அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.

பாஜகவுடன் இருப்பவர்கள் எல்லாருமே ஊழல்வாதிகள் தான். பாஜக ஆளும் மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் 1730 நாட்களில் 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். பாஜக வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் நான் பதிலளித்து விட்டேன். ஆனால் நான் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பாஜக பதில் அளிக்கவில்லை. பாஜகவினர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டேன் எனது கேள்விகளுக்கு எப்போது பதில் அளிப்பீர்கள்? எங்களின் எந்த கேள்விக்கும் பாஜகவிடம் இருந்து பதில் வராது.

தமிழ்நாட்டுக்கு பாஜக செய்த துரோகங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு துரோக கூட்டணி; என்.டி.ஏ. என பாஜக உருவாக்கியுள்ள கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது. அரசமைப்பு சட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுவதே உண்மையான நாட்டுபற்று. தமிழ்நாட்டுக்கு துரோகங்கள் மட்டுமே செய்கிறது பாஜக என்று விமர்சனம் செய்தார்.

Related Stories: