திண்டுக்கல், ஜன.30: திண்டுக்கல்லில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான தனிப்படை போலீசார், திண்டுக்கல் நகர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேகம்பூர் சிக்கந்தர் சாகிப் தெருவில், ரேஷன் அரிசி மூட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்து கேரளாவிற்கு கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அங்கு நின்றிருந்த காரிலும் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 1.5 டன் ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, முகமது சௌஹான் சேட் (23) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 6 வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள், மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
